புதன், 11 மே, 2011

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.


மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும்.


1) சிதம்பரம் - கனகசபை
2) திருவாலங்காடு - இரத்தினசபை
3) மதுரை - வெள்ளிசபை
4) திருநெல்வேலி - தாமிரசபை
5) திருக்குற்றாலம் - சித்திரசபை.


இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.


சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.


கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.


ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.


தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.


நிருத்தசபை - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.


இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.


கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.


மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.


மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு. 500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.


திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.


தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.


1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்


2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,


3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்


4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,


5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.


6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.



கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.


எப்படி செல்வது?
1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.


3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில்.

மகாபலிபுரம் பாகம்

வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?


நிச்சயமாக. அதுதான் எனது வேலையே. வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து வர்றீங்க?


மதுரைலேந்து. பசங்களுக்கெல்லாம் லீவு விட்டதால ஊரைச் சுத்தலாமுன்னு கெளம்பிட்டோம்.


சரி மாமல்லபுரத்தைப் பற்றி தெரிஞ்சுக்குவோம். காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற மாமல்லபுரத்துக்கு மகாபலிபுரமுன்னு இன்னொரு பேரும் இருக்கு. மாமல்லபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்த இடத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லாவின் பெயரைக்கொண்டு பெயர் வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப் படுகிறது. இந்த இடத்துல இருக்கிற பல சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது.


இந்த இடத்துக்கு வேற என்ன சிறப்பெல்லாம் இருக்கு?


இந்த இடத்தை ஐ.நா சபையோட UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிச்சிருக்கு. மேலும் இந்த இடம் தமிழகத்தோட மிக பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும் சிற்பக்கலையையும் பாரம்பரியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வர்ராங்க.


மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.


மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க போகலாம் வாங்க.


இவைதான் ஐந்து ரதம். இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் ஆன கோவில்கள் தேர் போல இருப்பதால் இதற்கு ரதம் எனும் பேர் வைக்கப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன்தான் இதை உருவாக்கியவர். இந்த ஐந்து கற்கோவில்களும் பஞ்சபாண்டவ இரதங்கள் என்றும் சொல்லலாம்.


எல்லாமே ஒற்றைக் கற்களால் ஆனவையா?


இதில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று மட்டும் சில கற்களால் இணைத்து செய்யப்பட்டதுள்ளது.


அடுத்து எங்கு செல்லப் போகிறோம்?


வாங்க அர்ச்சுணன் தபசு பற்றி தெரிந்துகொள்ளலாம். பெரிய பாறையில் பல சிற்பங்களை செதுக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அருச்சுணன் தபசு. முப்பது மீட்டர் உயரமும், அறுபது மீட்டர் நீளமும் இருக்கிறது.


நல்லா பாத்தீங்கனா இதுல நாலு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்குது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


இதற்கு எப்படி அர்ச்சுணன் தபசுன்னு பேர் வைத்தார்கள்?


இதில் உள்ள ஒரு சிற்பம் ஒரு மனிதன் தவம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அர்ச்சுணன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்ததால் இதனால் இதற்கு அருச்சுணன் தபசு என அழைக்கிறோம். சில பேர் பகீரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது போல் தோன்றுவதால் இதனை பகீரதன் தபசுன்னு குறிக்கிறார்கள்.


வாங்க! நல்லா சாப்டீங்களா?


சாப்பிட்டாச்சு! இப்ப என்ன பார்க்கப் போறோம்!


கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!


இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.


சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?

ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.


மேல சொல்லுங்க!



இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.


கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!


ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..


சரி, சரி அடுத்து எங்க?


வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.


மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?


மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.


வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.


இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?


நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.


உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?


ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.


இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.


இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.


எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம்.



புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..


புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.



அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.


இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க. பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.


சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.


அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.


பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான்,
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.


ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.


என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..


குறிப்பு : இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்

கங்கை கொண்ட சோழபுரம்

இன்று நாம் சோழர்கள் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். கங்கை கொண்ட சோழபுரம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தனது தலைநகரமாக ஆக்கினார்.


தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இந்தக் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள எனது முந்தைய இடுகையைப் பார்க்கவும்.



தஞ்சையில் ஆண்மையின் வீரம் தெரிவது போல கங்கை கொண்ட சோழபுரத்தில் பெண்மையின் அழகும் மென்மையும் வெளிப்படுகிறது என்றே கூறலாம். ஒரு பெண் எப்படி மற்றவர்களை கவர்கிறாளோ அது போலவே இந்தக் கோவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என நீங்கள் கேட்கலாம். அதாவது கோயில் விமான அமைப்பில் நேர் கோடுகள் இல்லாமல் நெளிவுகள் இருக்கின்றன. தஞ்சையை விட இந்தக் கோவில் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது என்பதும் இதற்கு ஒரு காரணம்.


இந்தக் கோயிலின் முகப்பு பகுதி மஹாதுவார் என்று அழைக்கப்படுகிறது. விமானத்தின் உயரம் 182 அடி. ஆனால் தஞ்சை விமானத்தைவிட சிறியது. விமானத்தில் எட்டு நிலைகள் இருக்கின்றன. கோபுரத்தின் பல இடங்களில் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் பெண்மையை குறிக்கிறது. இந்தக் கோவிலின் மூலம் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் கலைத்திறமையின் மூலம் அறியலாம்.


இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை பெரிய கோவிலைப் போல் கட்ட எண்ணி உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கோவில். கடைசியில் பல மாற்றங்களோடும் பெண்மையோடும் உருவானதே இந்தக் கலைக் கோவில். கற்சிலைகளே இந்தக் கோவிலின் பொக்கிஷமாகும். பல பேர் இந்தக் கோவிலைக் கொள்ளையடித்ததாக கூறினாலும் சோழர்களின் பெருமையை நிலைநாட்ட கற்சிலைகள் கோவிலில் அணிவகுத்து நிற்கின்றன. இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது சிங்க கேணியும், ராஜராஜ சோழனுக்கு சிவனும் பார்வதியும் முடிசூட்டுவதும், நாட்டியமாடும் விநாயகரும், அர்த்தநாரிஸ்வரரும் ஆகும். இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது அதுவே சிங்க கேணியாகும். தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.


இந்தக் கோவிலின் சிவலிங்கம் 4 மீ உயரம் உள்ளது. அரச குடும்பத்தினர் வழிபடுவதற்காக தனி வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வாழ்க்கை வரலாறே இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறலாம். கோவிலில் பல இடங்களில் சோழர்களைப் பற்றிய அறிய தகவல்கள் இங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்து சோழர்களைப் பற்றி அறிவதற்கு பதிலாக இங்கு சென்று அறிந்துகொள்ளுங்கள், அந்தப் படத்தில் இருப்பதை விட அதிக தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.


கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம். அதை பாதுகாப்பது நமது கடமையும் கூட. முடிந்தால் இங்கு சென்று வாருங்கள், கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.
இங்கு செல்ல முடியவில்லை என்றால் பரவாயில்லை. பல பேருக்கு இந்த இடுகையைப் பற்றி தெரியப்படுத்துங்கள், அவர்கள் செல்லட்டும். கடைசியாக ஒன்று தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.


எப்படி செல்வது?
1)தமிழகத்தின் பல இடங்களில் இருந்து அரியலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன


2)அரியலூரில் ரயில் நிலையமும் உள்ளது மேலும் விபரங்கள்

3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 64 கி.மீ தொலைவில்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.




மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.


வரலாறு:
முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.


ஸ்தலவிருட்சம்:
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.


தலவரலாறு:
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.


சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.


விழாக்கள்:
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.


கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


எப்படி செல்வது:
1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.


2)காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.


3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.
.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம்.

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது.

வரலாறு:
இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.

ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.

மேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம்.

சிறப்பு:

இக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.


அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர். முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார்.


தல புராணம்:
இங்கு உள்ள லிங்கம், ஒரு முறை அம்பிகை பூமிக்கு வந்தபோது காவேரியில் சிறிது நீர் எடுத்து உருவாக்கப்பட்டது. இந்த லிங்கம் காட்டில் நாவல் மரத்தின் அடியில் இருந்தது. சிவகணங்களில் இருவர் சாபம் காரணமாக இந்த காட்டில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அச்சமயம் அந்த சிவலிங்கம் கூரையில்லாததால் வெயில் மற்றும் மழையினால் சேதத்துக்கு உள்ளாக இருந்தது. சிலந்தி சிவனின் மேல் வலை பின்னி காத்தது. அந்த வலையை அழித்து யானை காவிரியில் இருந்து நீரும், பூவும் கொண்டு வழிபட்டது. இதனால் சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் புகுந்ததால் இரண்டும் செத்து மடிந்தது.

பின்னர் சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தியை கோச்செங்கட் சோழனாக ஆக்கினார். கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்றும் அழைக்கிறார்கள்.

சிற்பக்கலை:
இங்கு உள்ள மூன்று கால் முனிவர் சிலையும், அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு வெளியே உள்ள ஏகநாதர் சிலையும், நான்கு கால் தூணில் காணப்படும் மங்கையர் சிற்பமும் இக்கோவிலில் உள்ள மிகச்சிறந்த சிற்பங்களாகும்.




விழாக்கள்:
மற்ற கோவில்களைப் போல இக்கோவிலிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் உச்சிக் கால பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. உச்சிக் காலத்தில் லிங்கத்துக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இங்கு உள்ள அர்ச்சகர் பெண் வேடமிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார். மேலும் வருடந்தோறும் பங்குனி பிரமோத்சவம், பஞ்ச பிரகாரம், வசந்த உத்சவம், தைப்பூசம், ஆடிபூரம், பிடாரி அம்மன் திருவிழா போன்ற திருவிழாக்களும் நடைபெறுகின்றன.



கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதஸ்தலங்களுள் இந்தக் கோவிலும் ஒன்று. பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்தக் கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

வரலாறு:



மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.



மேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.




பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகராத்தார்களினால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு 1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.



கட்டிடக்கலை:
பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது இந்தக் கோவில். கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும், கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன. கோவிலின் பிரதான கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.

கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம். கோவில் மிகப் பெரியது என்பதால் ஒவ்வொரு பிரகாரத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை இனி காண்போம்.

ஆறாம் பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.

ஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம்.

நான்காம் பிரகாரம்:


கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.




மூன்றாம் பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.

இரண்டாம் பிரகாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.


முதல் பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.

சிற்பக்கலை:
இங்கு உள்ள கிழக்கு கோபுரத்தில் நடன சிற்பங்களை காணலாம். மேலும் இந்தக் கோவிலில் இருந்து ஏராளமான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 119 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

தல வரலாறு:
படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை.

பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார்.

சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும். த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

அண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. இந்த தவற்றிற்காக காஞ்சிபுரத்தில் மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டார் பார்வதி. அச்சமயத்தில் சிவபெருமான் தோன்றி அவரை திருவண்ணாமலைக்குச் சென்று வழிபடும்படி பணித்தார். அங்கு பவளக் குன்றில் கெளதம முனிவரின் உதவியோடு பார்வதி மேற்கொண்ட தவத்தை மஹிசாசுரன் என்னும் அரக்கன் தடுத்தான். இதனால் கோபமுற்ற பார்வதி துர்கை வடிவம் கொண்டு அவனை அழித்தாள். பின்னர் சிவபெருமான ஜோதி வடிவில் பார்வதிக்கு காட்சி தந்து பார்வதிக்கு தன் உடம்பின் இடப்பக்கத்தை தந்து அர்த்தநாரியாக மாறினார் என்றும் கூறப்படுவதுண்டு.

கிரிவலம்:
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது. மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை. இப்படி சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும். எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு.




14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும் உள்ளன. மாணிக்கவாசகரை சிறப்பிக்கும் வகையில் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் ஒரு கோவிலையும் காணலாம். இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.

சிறப்புகள்:
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.

அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய முயன்றபோது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த திருவண்ணாமலை. மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும் இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம்.

அப்பர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் இங்கு இருந்து திருவெம்பாவையையும், திருஅம்மானையையும் இயற்றினார் என்று சொல்வர்.

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ் இருந்து பார்த்தால் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் காணலாம்.


விழாக்கள்:
அனைத்து கோவில்களைப் போல் தினமும் ஆறு கால பூஜைகள் இங்கும் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பிரமோத்சவம், ஆடி பூரம், நவராத்திரி, தை மாதம் உத்திராயன புன்னிய கால பிரமோத்சவம், திருவூடல் திருவிழா, மாசி மாதம் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் பார்வதிக்கும் ஜோதியாக காட்சியளித்ததை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கார்த்திகை தீப உற்சவமும் நடைபெறும். இந்த திருவிழாவின் போது போன வ்ருடம்(2009) முப்பது லட்சம் மக்கள் திரண்டு ஜோதி வடிவான அண்ணாமலையாரை வழிபட்டனர்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

தங்கும் இடங்கள்:
எங்கும் காணாத வகையில் இங்கு கோவிலிலேயே தங்கும் வசதிகள் உள்ளன. இங்கு உள்ள அப்பர் இல்லத்தில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாயும், உண்ணாமுலை அம்மன் இல்லத்தில் தங்குவதற்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.

எப்படி செல்வது?
1) திருவண்ணாமலைக்கு சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம், சிதம்பரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.

2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டிவனம் 60 கி.மீ தொலைவில்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 185 கி.மீ தொலைவில்.